இலங்கையில் அனைத்து மக்களுக்குள் சமமான உரிமையை ஏற்படுத்துவது தனது இலக்கெனவும் சிறுபான்மை இனங்கள் என்று விளிப்பதைக் கூட தாம் விரும்பவில்லையென ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்மாரை சந்தித்துப் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்
.

அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கொழும்பு இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன் ,திகாம்பரம் ,ரவூப் ஹக்கீம் ,ரிசார்ட் பதியுதீன் ,இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அனைத்து இன மக்களுக்கும் ஒரே வகையில் செயற்படும் திட்டங்களை தாம் கொண்டுள்ளதாகவும் எல்லோருக்கும் ஒரே நீதி என்பதே தமது கொள்கை என்றும் தெரிவித்துள்ளார்.
”இனவாத ரீதியான செயற்பாடுகளுக்கு நான் இடமளிக்க மாட்டேன்.எனது தந்தையார் காலத்தில் கூட நாங்கள் அனைத்து இனத்தவரையும் அரவணைத்தே செயற்பட்டோம்.பெரும்பான்மை சிங்கள மக்களின் எண்ணப்பாட்டை மாற்ற வேண்டும்.அவர்களுக்கு உண்மை நிலையை சொல்ல வேண்டும்.அதனை நான் செய்வேன்.தமிழ் ஊடகங்கள் எனது பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் ” என்று குறிப்பிட்டார் சஜித்
நன்றி : சிவா ராமசாமி












